» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கால்நடை மருத்துவமனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2024 3:14:23 PM (IST)


தூத்துக்குடியில்  ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையினை முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து  இன்று (20.08.2024) காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதுகிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்  குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர் பி.கீதா ஜீவன்  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசு கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும்,  மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப்புரட்சியை ஏற்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை தீவிர முறையில் செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான கட்டிடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டிட வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர்கள் தங்களது கால்நடைகளை நன்கு பராமரித்து பயன்பெறும் வகையில் இன்றைய தினம்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.3 கோடி செலவில் எழில்மிகு தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனைக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சிப்பொறுப்பேற்றப்பிறகு அனைத்துத்துறைகளுக்கும் தேவையான கட்டிட வசதி, சாலை வசதி, உட்கட்டமைப்பு வசதி, நவீன தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில் நல்ல பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். கலைஞர் நூற்றாண்டு கட்டிடமாக இருந்தாலும் சரி, கால்நடை பன்முக மருத்துவமனைக் கட்டிடமாக இருந்தாலும் சரி அனைத்துத் துறைகளுக்கும் கட்டடவசதி தேவையான ஒன்று என்பதை நன்கு அறிந்த  தமிழ்நாடு முதலமைச்சர்  அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.
 
அதன்படி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கால்நடை பன்முக மருத்துவமனையில் பெரிய மற்றும் சிறிய செல்லப் பிராணிகளுக்கான அறுவை சிகிச்சைக் கூடம், குளிரூட்டப்பட்ட தடுப்பூசி மருந்து சேமிப்பு அறை, ஆய்வுக் கூடம், கூட்டரங்கு, மருத்துவர் அறை, உதவி மருத்துவர் அறை, அது போல வெளி நோயாளி கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக, வெளிபுறத்தில் அறுவை சிகிச்சைக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இது ஒரு தலைமை கால்நடை மருத்துவமனையாக இருந்து கால்நடை பன்முக மருத்துவமனையாக செயல்படும். 

செல்லப்பிராணிகளுக்கும், கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய உன்னத மையமாக இந்த கால்நடை பன்முக மருத்துவமனை திகழும். இவ்வாறு நம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு தேவையான கட்டிட வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு வசதிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் பி.கீதா ஜீவன்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சஞ்சீவீ ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவி அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory