» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் : காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆய்வு
சனி 27, ஜூலை 2024 5:00:39 PM (IST)
"மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தூத்துக்குடி உட்பட 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.07.2024) தலைமைச் செயலகத்தில், "மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் மேற்கொண்டதோடு, காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.
அரசு துறைகளை தொடர்பு கொள்ளும் பொது மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையினை அதிகரித்து அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, பொதுமக்கள் அதிகமாக பயன்பெறும் 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெறும் வண்ணம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுமார் 2058 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் விரைவாக பரிசீலிக்கப்பட்டு உரிய பயன்கள் முறையாக பயனாளிகளுக்கு சென்று சேர்ந்துள்ளது. மேற்கண்ட முகாம்கள் வாயிலாக மொத்தம் 8.75 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
நகரப்பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பெருமளவில் பயன்கள் பெற்றதை தொடர்ந்து, ஊரகப்பகுதிகளிலும் "மக்களுடன் முதல்வர்” திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர் ஊராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளில் 2,341 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, தற்போது வரை 861 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஊரகப் பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகள் சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன.
"மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
முதலமைச்சர் "மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டறிந்த விவரங்கள்: தமிழ்நாடு முதலமைச்சர் , மாவட்ட ஆடசித் தலைவர்களுடன், முகாமிற்கு மக்களுடைய வரவேற்பு எப்படி இருக்கிறது என்றும், முகாமிற்கு வருகை தந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், எத்தனை முகாம்கள் நடைபெற்றுள்ளன என்றும், இதுவரை நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை குறித்தும், சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மனுக்கள் பெறப்படுகிறது என்பது குறித்தும், அதிகமாக எந்தந்த துறைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படுகிறது, முகாம்களில் எத்தனை கவுன்ட்டர்கள் மற்றும் கணிணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன போன்ற விவரங்களை கேட்டறிந்தார். "மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு விளம்பரம் மூலம் எவ்வாறு தெரிவிக்கப்பட்டது குறித்தும், முகாம்கள் காலை எத்தனை மணிக்கு தொடங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
"மக்களுடன் முதல்வர்” திட்ட செயல்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, அளித்த விளக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 72 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 32 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 26,468 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நாளொன்றுக்கு சராசரியாக 800 மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, மனை உட்பிரிவு பெயர் மாற்றம், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் கோரியும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருவாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் , மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு, "மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வளர்ச்சி ஆணையர் நா. முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் / முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.