» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நடு கடலில் படகு கவிழ்ந்தது : 7 மீனவர்கள் உயிருடன் மீட்பு
வெள்ளி 26, ஜூலை 2024 9:48:19 PM (IST)
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பைபர் படகு கவிழ்ந்ததில் 7 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாரியப்பன் (40) என்பவருக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத பைப்பர் படகில் மீனவர் காலனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (32), பழனி (38), நாகராஜ் (34), சக்திவேல் (20), கணேஷ் (21), பாலா (27), மற்றும் முத்து (20) மொத்தம் ஏழு மீனவர்களுடன் தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை 05.30 மணிக்கு மீன் பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
புதிய துறைமுகத்திலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடலில் ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றின் காரணமாக பைப்பர் படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து. இதனால் அதிலிருந்து 7மீனவர்கள் படகை பிடித்துக்கொண்டு மிதந்து கொண்டிருக்கும்போது அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புன்னக்காயலை சேர்ந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு 7 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் சென்ற பைப்பர் படகு மற்றும் அதிலிருந்து வலைகள் கடலுக்குள் மூழ்கியது. கடலில் பத்திரமாக மீட்கப்பட்ட 7 மீனவர்களும் புன்னக்காயல் மீனவர்கள் சென்ற படகில் ஏறி புன்னகாயல் கடற்கரையில் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடிக்கு கார் மூலம் வந்தனர் 7 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவர்கள் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்