» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட தமாகா தலைவா்கள் நியமனம்
வியாழன் 25, ஜூலை 2024 10:00:32 AM (IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தூத்துக்குடி மாவட்டம் 4ஆக பிரித்து புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தெற்கு, வடக்கு என இரு மாவட்டத் தலைவர்கள் இருந்து வந்தனர். கடந்த மக்களவைத் தேர்தலில் தமாகா தூத்துக்குடி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. அதையடுத்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவித்துள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் கூடுதலாக மத்திய, மேற்கு எனப் பிரிக்கப்பட்டு, நான்கு மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவராக எஸ்.டி.ஆர். விஜயசீலன், வடக்கு மாவட்டத் தலைவராக ராஜகோபால், மேற்கு மாவட்டத் தலைவராக முரசொலி மாறன், தெற்கு மாவட்டத் தலைவராக சுந்தரலிங்கம் ஆகியோர் உள்ளனர்.
மத்திய, வடக்கு மாவட்டங்களுக்கு தலா 2 பேரவைத் தொகுதிகள், மேற்கு மாவட்டத்துக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி, தெற்கு மாவட்டத்துக்கு திருச்செந்தூர் தொகுதி என எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம் வட்டாரத் தலைவராக ஐயப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.