» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை... உடல் தகனம்!!
புதன் 24, ஜூலை 2024 8:02:40 AM (IST)
மாணவன் கடத்தல் வழக்கில் சிக்கிய தூத்துக்குடி ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்த நிலையில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி மைதிலி ராஜலட்சுமி (40). 10-ம் வகுப்பு படித்து வரும் இவருடைய மகனை, கடந்த 11-ந்தேதி ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றபோது ஒரு கும்பல் கடத்தி, ரூ.2 கோடி கேட்டு மிரட்டியது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து மாணவரையும், ஆட்டோ டிரைவர் பால்பாண்டியையும் மீட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மகாராஜா ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் குஜராத்தில் சூர்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக மதுரை மாணவன் கடத்தலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் தன்னை இந்த வழக்கில் சிக்க வைத்துவிட்டதாக கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதம் குறித்து மதுரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சூர்யாவின் உடல் குஜராத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 8.20 மணிக்கு மதுரை வந்தது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துளசிப்பட்டி கிராமத்துக்கு நேற்று பகல் 11.25 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
உறவினர்கள், கிராமமக்கள் சூர்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சூர்யாவின் உடலுக்கு, அவரது தந்தை பாலு எரியூட்டினார்.
இது குறித்து மதுரை போலீசார் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட சூர்யா எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டதற்கு, கடத்தப்பட்ட மாணவனின் தாயார் ராஜலட்சுமி காரணமா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும். தலைமறைவாக உள்ள மகாராஜாவை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு விரைந்துள்ளனர். விரைவில் அவர் சிக்குவார். அவர் பிடிபட்டுவிட்டால் இந்த சம்பவங்களுக்கான அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்துவிடும்" என்றனர்