» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒருவர் கைது : இரு சக்கர வாகனம் பறிமுதல்!
திங்கள் 12, பிப்ரவரி 2024 12:02:12 PM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். ரூபாய் 48,580 பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வாலையானந்த சுவாமி கோவில் தெரு ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முக வேலாயுதம் மகன் அலமேலு நாதன் (59) என்பதும் அவர் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அலமேலு நாதனை கைது செய்து அவரிடமிருந்த 400 கிராம் கஞ்சா, ரூ.48,580 பணம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அலமேலு நாதன் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.