» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசாகத்தை முன்னிட்டு டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் முதலுதவி மருத்துவ மையம்
வியாழன் 1, ஜூன் 2023 7:34:31 PM (IST)
வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக திருச்செந்தூர் வந்த பக்தர்களுக்கு சாகுபுரத்தில் முதலுதவி மருத்துவ மையம் மூலம் மருத்துவ உதவி மற்றும் நீர், மோர் அளித்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். நாளை நடக்க இருக்கும் விசாக திருவிழாவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்ய வந்த வன்னம் உள்ளனர்.
இவ்வாறு வெகு தூரங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தசை வலி உட்பட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக ஆண்டு தோறும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் முதலுதவி மருத்துவ மையம் அமைத்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த முதலுதவி மருத்துவ மையத்தினை டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவர் (உற்பத்தி) எஸ்.சுரேஷ் துவக்கி வைத்தார். மேலும் சாகுபுரத்தில் பக்தர்கள் வசதிக்காக நீர் மோர் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.