» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் விசாக திருவிழா பாதுகாப்பு: எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு!
வியாழன் 1, ஜூன் 2023 3:34:14 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (01.06.2023) முதல் 03.06.2023 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முக்கிய திருவிழா நாளான நாளை (02.06.2023) திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (01.06.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மாயவன், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் உட்பட போலீசார் உடனிருந்தனர்.