» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்திருநகரி கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்
வியாழன் 1, ஜூன் 2023 3:11:19 PM (IST)
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி நம்மாழ்வார் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 8 மணிக்கு தங்கத்தேரில் நம்மாழ்வார் எழுத்தருளினார். 8.30 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கர கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 11 மணி அளவில் தேர் நிலை வந்தடைந்தது.
நாளை (2-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில் வானமாமலை ராமானுஜ ஜீயர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.