» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எச்.ராஜா காரை முற்றுகையிட முயன்ற விசிக : கோவில்பட்டியில் பரபரப்பு
புதன் 22, மார்ச் 2023 7:25:59 AM (IST)
கோவில்பட்டியில் எச்.ராஜா காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், கிருஷ்ணன் கோவில் திடலில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று மாலையில் காரில் வந்தார். அவர் மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, கூட்டத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மந்தித்தோப்பு ரோடு சந்திப்பு மங்கள விநாயகர் கோவில் முன்பு தங்கள் கட்சி கொடியுடன் எச்.ராஜா காரை வழிமறிக்க முயற்சி மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்திரவின் பேரில் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சதுரகிரி, மாநில துணை செயலாளர் இளஞ்சேரன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பெஞ்சமின் உள்பட 25 பேரை கைது செய்தார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.