» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)
தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 செல்போன்கள் மற்றும் ரூ.19ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி ரோச் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த தொம்மை மகன் வெலிங்டன் (33), தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் ஸ்டாலின் (23) மற்றும் தூத்துக்குடி வாடி தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (23) ஆகிய மூவரும் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 750 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் ரூ.19,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட வெலிங்டன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், தருவைகுளம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கும் என 8 வழக்குகளும், ஸ்டாலின் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கும், மற்றொரு உதயமூர்த்தி மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கம் என 3 வழக்குகள் உள்ளது.