» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நகர எல்லையில் இருக்கும் டோல்கேட் அகற்றப்படுமா? கனிமொழி எம்பி குரல் கொடுப்பாரா?
புதன் 10, ஆகஸ்ட் 2022 11:25:45 AM (IST)
தூத்துக்குடி நகர எல்லைக்குள் அமைந்துள்ள டோல்கேட்டை அகற்ற பாராளுமன்றத்தில் கனிமொழி எம்பி குரல் எழுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி எல்கையில் இருந்து 15 கிமீ தொலைவிற்கு அப்பால் டோல் கேட் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் மாநகராட்சி எல்கையில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வண்டிகளுக்கு கட்டணம் கேட்டு தகராறு நடப்பது வழக்கமாகிறது. இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார். மேலும் கிருஷ்ணகிரி நகரில் 7 கிமீ தொலைவில் சுங்கச்சாவடிகள் இருப்பதை நியாயப்படுத்த முடியாதும், மக்கள் சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடுவது முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று தூத்துக்குடி நகரில் இருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இது குறித்து தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் அசோசியேஷன் தலைவர் எஸ்.சுப்புராஜ் கூறுகையில், இந்த டோல்கேட்டால் லாரி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தருவைகுளம், வேப்பலோடை, வேம்பார், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் அதிகளவில் உள்ளது.
இந்த உப்பளங்களுக்கு செல்லும் லாரிகள் இசிஆர் வழியாக சென்று வருகிறது. இந்த டோல்கேட் நகருக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் வாகனங்கள் சங்க கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம் என்றார். தூத்துக்குடி நகர எல்லைக்குள் அமைந்துள்ள டோல்கேட்டை அகற்ற பாராளுமன்றத்தில் கனிமொழி எம்பி குரல் எழுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவன்Aug 10, 2022 - 03:30:47 PM | Posted IP 162.1*****