» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தனி நபர் ஆணையம் நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாளான கடந்த 2018ஆம் ஆண்டு மே22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2 பெண்கள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அமைக்கப்பட்டது.
கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உறவினர்கள், போராட்டக்குழுவினர், தூத்துக்குடி மக்கள், நேரடி சாட்சிகள், மறைமுக சாட்சிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கால நீட்டிப்புகளை கடந்த சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார்.
இதனை தொடர்ந்து ஆணையத்தின் விசாரணை காலம் கால அவகாசம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தனிநபர் விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.