» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகளில் ஆய்வு : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்!
செவ்வாய் 17, மே 2022 11:07:32 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கு கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகள் அனைத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையாளர் அவர்களால் நியமிக்கப்படும் பணியாளர்களைக் கொண்டு ஆண்டுதோறும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை (பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகு) 01.06.2022 மற்றும் 02.06.2022 ஆகிய நாட்களில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
மேலும், விசைப்படகுகள் ஆய்வு செய்யப்படும் நாளில் படகு உரிமையாளர்கள் படகு பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் பாஸ்புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திடுமாறும், ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், நேரடி கள ஆய்வின் போது ஆய்விற்கு உட்படுத்தாத படகுகளுக்கு அரசின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி அப்படகுகளின் பதிவுச் சான்றினை உரிய விசாரணைக்கு பின் இரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மற்றும் ஆய்வு நாள் அன்று படகினை ஆய்வுக்கு உட்டுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.