» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயிா் இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்
சனி 22, ஜனவரி 2022 8:08:53 AM (IST)
பயிா் இழப்பீடு கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினா்.
2020-21ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு தொகையை விரைந்து வழங்க கோரி கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் வரதராஜன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு சுமார் 1லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், வெள்ளைச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டிருந்தனர். ஆனால் தொடர் மழையினால் பயிர்கள் அனைத்து மழைநீரில் மூழ்கி அழுகி சேதமடைந்தது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்ட போது அப்போதைய தமிழக அரசு ஏக்கருக்கு ரூ 4 ஆயிரம் நிவாரண தொகை வழங்கியது. மேலும் கடந்த காலங்களில் பயிர்காப்பீடு தொகை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதங்களில் வழங்கப்பட்டது. தற்பொழுது 13மாதங்களுக்கு மேலாகியும் வரவில்லை. எனவே அரசு மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது மட்டுமின்றி, பயிர்காப்பீடு தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சங்க போராட்டத்தில் வட்டச் செயலா்கள் சங்கிலிபாண்டி (கோவில்பட்டி), பாலமுருகன் (எட்டயபுரம்), ராமலிங்கம் (விளாத்திகுளம்), சீனிபாண்டியன் (கயத்தாறு), மாநிலப் பொருளாளா் பெருமாள், மாவட்டச் செயலா் புவிராஜ், மாவட்டப் பொருளாளா் ராமசுப்பு, மாநிலக்குழு உறுப்பினா் மணி, விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் மகாலிங்கம், கமலக்கண்ணன், செல்வராஜ், சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.