» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி : மகன் கண் முன்னே பரிதாபம்!
வியாழன் 20, ஜனவரி 2022 9:38:02 PM (IST)
சாத்தான்குளம் அருகே மீன்பிடிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுதுண்ணாகுடியை சேர்ந்தவர் ராஜகோபால் (62). மரம்வெட்டும் தொழிலாளி. இவரும், அவரது மகன் மணிகண்டனும்(32) நேற்று அங்குள்ள குளத்தில் மீன் பிடிக்க வலைவிரித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ராஜகோபால் தடுமாறி குளத்தில் விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். மணிகண்டனுக்கு நீச்சல் தெரியாததால் உடனடியாக அவரால் தந்தையை காப்பாற்ற முடியாமல் கரையில் இருந்தவாறு கூச்சல் போட்டார்.
அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் குளத்துக்கு திரண்டு வந்து ராஜகோபாலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் தீயணைப்புநிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில வீரர்கள்சென்றுராஜகோபாலை தேடும்பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகி விட்டதால் மீட்புபணி தடைபட்டது.
இதையடுத்து இன்று காலையில் தீயணைப்புவீரர்கள், குளத்தில் தேடியதில் இறந்தநிலையில் ராஜகோபால் உடலை மீட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.