» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரர் தற்கொலை முயற்சி : யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு!!
புதன் 8, டிசம்பர் 2021 7:26:33 PM (IST)
தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் மனைவி, குழந்தை முன்னிலையில் ஒப்பந்ததார் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டுரன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (37). ஒப்பந்ததாரர். இவர் இன்று மனைவி மாரிதினா (36), மகள் வேதிகா(6) ஆகியோருடன் புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் விரைந்து சென்று, ராஜா கையில் வைத்து இருந்து தீப்பெட்டியை தட்டி விட்டார்.
உடனடியாக குடத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றினார். பின்னர் அவருடன் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒப்பந்ததாரர் ராஜா கூறியதாவது:- எனக்கு வர்த்தகரெட்டிபட்டி பஞ்சாயத்தில் பிளம்பிங் எலக்ட்ரிகல் மற்றும் புதிய பணிகள் மேற்கொள்ள பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் அளித்த ஒப்புதல் மூலம் கடந்த 1.4. 2020 முதல் பணிகளை மேற்கொண்டு வந்தேன்.
நான் செய்த பணிக்கான தொகையினை கடந்த 1.10.2020 வரை சரியாக வழங்கி வந்தனர். இந்நிலையில் வர்த்தக ரெட்டிபட்டி பஞ்சாயத்தில் புதிய நிர்வாகம் வந்துள்ளது. இதனால் தான் செய்த பணிக்கான தொகை ரூ.9 லட்சத்து 21 ஆயிரம் பஞ்சாயத்தில் கேட்டபோது அவர்கள் சரியான பதில் கூறவில்லை. 1.4.2021 பராமரிப்பு பணிகளை முடித்து விட்டேன். இதற்கான தொகை எனக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லாமல் உள்ளது. அதனால் தான் வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றேன்’ என்றார்.
இதுகுறித்து இன்னும் 2 நாட்களில் உங்கள் பிரச்சினைகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரி உறுதி கூறினார். இதை தொடர்ந்து ராஜா, மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார். இந்த சம்பவத்தால் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.