» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார்த்திகை மாத பிறப்பு : ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்
புதன் 17, நவம்பர் 2021 8:14:32 AM (IST)
கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்ட இந்த விதி முறைகள் தற்போது வரை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு தினமும் ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் என பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தினமும் 30ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு என்ற நடைமுறையே பின்பற்றப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை "நெகட்டிவ்” சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கரோனா கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், வழக்கமாக கார்த்திகை மாதம் வந்தவுடன் மாலை அணிந்து விரதம் இருந்தே வருகிறார்கள்.
சபரிமலைக்கு செல்ல முன்பதிவு செய்யமுடியாத பக்தர்கள், தங்களது ஊரின் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் வழக்கம் போல் ஐயப்பனுக்கு மாலை அணிந்து வருகிறார்கள். கார்த்திகை மாதம் இன்று (புதன்கிழமை) பிறந்ததை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர்.
இந்நிலையில் கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடந்தது. கோவிலில் கலச நீராட்டு விழா நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஐயப்ப பக்தர்கள் காலை 4-30 மணி முதல் 6 மணிக்குள் தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்டனர்.
திருக்கோவிலில் உள்ள மூலவர், சண்முகர் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி, கொடிமரம் முன்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மாலை அணிய வந்த பக்தர்களுக்கு குருசாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்தனர். திருக்கோவில் வளாகம் எங்கும் சரண கோஷம் ஒலித்த வண்ணம் இருந்தது.
MAKKALNov 17, 2021 - 03:15:18 PM | Posted IP 108.1*****