» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேக் இன் தூத்துக்குடி என்ற நிலை உருவாகும் : கனிமொழி எம்பி நம்பிக்கை!
வெள்ளி 24, செப்டம்பர் 2021 4:01:22 PM (IST)
"மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு என்ற நிலையை தாண்டி மேக் இன் தூத்துக்குடி என்ற நிலை உருவாகும்" என கனிமொழி எம்பி நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் , "வர்த்தக மற்றும் வணிக வாரம்”; அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியினை உலகளவில் மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்தும் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்தக் கண்காட்சியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் கயிறு உற்பத்தி, தீப்பெட்டி உற்பத்தி, கோவில்பட்டி கடலை மிட்டாய், கடல்சார் உற்பத்தி, ரசாயன தொழில்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளை விளக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த கனிமொழி எம்பி பேசுகையில் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டு வரும் வகையில் இந்த அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைடல் பார்க் போன்றவற்றிக்கான அறிவிப்பை பிறப்பித்துள்ளது. 41000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் பல்வேறு புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உற்பத்தி மேம்படுத்துவதற்கும் அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு,என்பதை தாண்டி மேக் இன் தூத்துக்குடி என்ற நிலை உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடக்கவிழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கண்ணபிரான் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஜோ பிரகாஷ், மாவட்ட சிறு குறு தொழில் சங்க தலைவர் நேரு பிரகாஷ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடி மண்டல மேலளார் சுரேஷ்குமார், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் சார்லஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர் இக்கருத்தரங்கில் ஏற்றுமதி குறித்த ஆலோசனைகள், வாய்ப்புகள் மற்றும் திட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டன.