» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாப சாவு
வெள்ளி 24, செப்டம்பர் 2021 8:24:47 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (54). இவரது மனைவி செந்தாமரை (47). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது கீழ்தளத்தில் உள்ள வீட்டின் கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்டு உள்ளது.
உடனே செந்தாமரை எழுந்து மாடியில் இருந்து வெளியே பார்த்தார். அப்போது, எதிர்பாராவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.