» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் கடத்திய 76 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:33:35 PM (IST)
விளாத்திகுளம் அருகே காரில் கடத்திய 76 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கஞ்சா கடத்தல் நடப்பதாக குளத்தூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடலோர காவல் படையினரும், குளத்தூர் போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சாலையோரத்தில் சந்தேகப்படும்படியாக நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனையிட்டனர். அந்தக் காரில், ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் காரை சோதனையிட்டதில் காரில் 4 மூட்டைகளில் 76 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் குளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து குளத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர்கள் பழனி முருகன் என்பவரது மகன் நாகார்ஜூன் (19), குருஸ் என்பவரது மகன் கஸ்வின் (24) மற்றும் கவின் (26) ஆகியோர் என்பதும், அவர்களுக்கு கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.