» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.10 லட்சம் பறிக்க முயற்சி: தூத்துக்குடி இளம்பெண் - கணவர் கைது!

சனி 31, ஜூலை 2021 3:49:59 PM (IST)

தொழிலதிபரை ஏமாற்றி ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண், அவரது கணவர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள கண்டியூரைச் சேர்ந்தவர் சரவண பார்த்திபன் (51). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார். இந்நிலையில் இவருக்கு தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்த ஜனனி ஜாஸ்மின் (23) இளம்பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஜனனி ஜாஸ்மினுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் பார்த்திபனுடன் வசித்து வருகிறார்.

தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லாமல் மறைத்த ஜனனி ஜாஸ்மீன், தொடர்ந்து சரவணனுடன் முகநூலில் பழகி வந்துள்ளார். அதனால் இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சிலமுறை நேரில் சந்தித்து பேசியதுடன், பார்க், பீச்சுமாக சுற்றியுள்ளனர். மேலும் ஜனனியின் அழகில் மயங்கி விழுந்த சரவணன், கேட்டதையெல்லாம் வாங்கி கொடுக்க ஆரம்பித்தார். இதனை சாதகமாக்கிய ஜனனி ஜாஸ்மின், சரவணனிடமிருந்து ஏழு லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

ஊரடங்கில் எப்படி இவ்வளாவு பணம் சம்பாதித்தாய் என கணவர் கேட்க, நடந்ததை கூறிய ஜனனியின் நேர்மையை பாராட்டிய பார்த்திபன், இந்த சம்பவத்திற்கு உடந்தையானான். சரவணனின் சபல புத்தியை சாதகமாகப் பயன்படுத்தி அவரிடமிருந்து மேலும் பணம் கறக்க முடிவு செய்த ஜனனி, முகநூலில் ரம்யா என்ற பெயரில் போலியாக ஒரு ஐடி உருவாக்கி அதன்மூலம் சரவணனை தொடர்புகொண்டு அவரிடம் பழகி வந்துள்ளார்.

சரவணன் வழக்கம்போல் அப்பெண்ணுடனும் முகநூலில் தொடர்ந்து நட்பில் இருந்துள்ளார். இந்நிலையில் ஜூலை 28 ஆம் தேதி சரவணனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தன்னை தூத்துக்குடி நகர போலீஸ் டிஎஸ்பி என அறிமுகம் செய்துகொண்டு, ‘உங்களுடன் முகநூலில் பழகி வந்த ரம்யா என்பவர் தற்கொலை செய்து இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இத் தகவலைக் கேட்டு சரவணன் அதிர்ச்சியடைந்தார்.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமெனில் பத்து லட்ச ரூபாய் தரவேண்டும் எனவும், இதற்கு சம்மதம் எனில் இன்ஸ்பெக்டர் ஒருவரை அனுப்பி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த டீலுக்கு சரவணனும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு வந்த ஜனனி கணவன் பார்த்திபன், தன்னை இன்ஸ்பெக்டர் எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டு, பணம் வாங்க வந்திருப்பதாக கூறியுள்ளார். டிஎஸ்பி கேட்ட ரூ 10 லட்சத்தை புரட்ட முடியாததால் தன் வசம் கையிலிருந்த ரூ 63,000ஐ பார்த்திபனிடம் கொடுத்த சரவணன், மீதிப் பணத்தை புரட்டி தரும் வரை தங்கியிருக்குமாறு கூறி அவரை கும்பகோணத்தில் உள்ள ஒரு லாட்ஜில் பார்த்திபன் பெயரிலேயே அறை எடுத்து தங்க வைத்துள்ளார்.

அதன் பின்னர் இதுபற்றி கும்பகோணத்தைச் சேர்ந்த தனது நண்பர்களான மனோகரன், வீரா ஆகிய 2 வழக்கறிஞர்களிடம் கூறி தனக்கு கடனாக பணம் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். இதைக்கேட்ட நண்பர்கள், இது போன்று போலீசார் நேரில் வந்து பணம் வாங்கமாட்டார்கள் எனக்கூறிய அவ்விரு வழக்கறிஞர்களும் பார்த்திபன் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்து அவரை நேரில் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவர் இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும் ஜனனி ஜாஸ்மினின் கணவர் என்பதும் தெரியவந்தது. 

அதோடு சரவணனை ஏமாற்றி அவரிடம் பணம் பறிப்பதற்காக ஜனனி ஜாஸ்மின் குரல் மாற்றும் செயலி மூலம் தூத்துக்குடி டிஎஸ்பி போல ஆண் குரலில் பேசி ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபன் மூலம் அவரது மனைவி ஜனனியை தொடர்புகொண்டு பேசி, அவர் கும்பகோணம் வந்தால் தான் அவரது கணவரை விடுவிப்போம் என சரவணனும் அவரது நண்பர்களும் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஜனனி ஜாஸ்மின் தூத்துக்குடியிலிருந்து ஒரு வாடகை காரில் புறப்பட்டு நேற்று (ஜூலை 30) காலை கும்பகோணம் வந்தார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். ஜனனியும் அவரது கணவரும் இணைந்து காவல்துறை அதிகாரிகள் போல் பேசி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றி சரவணனிடம் பணம் பறிக்க முயன்றது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சரவணன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தில்லாலங்கடி பெண் ஜனனி ஜாஸ்மின் அவரது கணவர் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதேபோல் ஜனனி ஜாஸ்மின் அவரது கணவர் பார்த்திபன் அவரது கணவரை சட்டத்திற்கு புறம்பாக அறையில் அடைத்து வைத்ததாக வழக்கு பதிவு செய்து சரவணன் அவரது நண்பர்களான குடவாசல் அடுத்த ஒகியை சேர்ந்த குருசாமி, தஞ்சாவூர் டிபிஎஸ் நகரை சேர்ந்த நடராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட 5 பேரும் கும்பகோணம் நீதிமன்ற குடியிருப்பில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory