» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மசாஜ் சென்டரில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியர் கைது
வியாழன் 29, ஜூலை 2021 9:32:59 PM (IST)
தூத்துக்குடியில் மசாஜ் சென்டரில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான தலைமைக் காவலர் மலர்கொடி மற்றும் காவலர் கலைச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருச்சி மாவட்டம் பெரிய மிளகு பாறை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மகன் தினேஷ்குமார் (24) என்பவர் திருச்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த பெண்களுக்கு ஆயுர்வேத மசாஜ் களீனிக் சென்டரில் வேலை வாங்கி தருவதாகவும், பணம் தருவதாகவும் கட்டாயபடுத்தி தூத்துக்குடி, டூவிபுரம் பகுதியில்; ஒரு வீட்டின் மேல்தளத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் தினேஷ்குமாரை கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேரையும் மீட்டு பாதுகாப்பாக தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி எதிரியை கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்ட தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.