» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி : ஆட்சியர் கி.செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்!
செவ்வாய் 20, ஜூலை 2021 12:26:26 PM (IST)
தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு குறித்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கரோனா தடுப்பூசிகளும் போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை சுமார் 3.35 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணிகள் அதிக அளவில் பொதுமக்களை சந்திக்கும் பணிகளை செய்பவர்கள் என பிரித்து போடப்பட்டு வருகிறது. 3வது அலை வந்தாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் மக்களின் தொடர்பு அதிகம் உள்ளவர்கள் என கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோவிலே வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு சிறிது நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருந்துவிட்டு தங்களது பணிகளை தொடரலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று ஒவ்வொரு பிரிவினரும் கண்டறியப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் பணிபுரியும் 210 நபர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 சதவிதம் ஆட்டோ டிரைவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகளும் நமது மாவட்டத்தில் நடந்து வருகிறது. மேலும் நமது மாவட்டத்தில் உள்ள 18000 மீனவர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மீனவர் குடியிருப்பு பகுதியிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதைப்போல பால் பாக்கெட் போடும் பணியாளர்கள், நியுஸ் பேப்பர் போடும் பணியாளர்கள், மக்களை அதிகமாக தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு தடுப்பூசி போடுவதால் 3வது அலை வந்தாலும் அதிக பரவல் இன்றி தடுக்கப்படும். நமது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டுள்ள 14 லட்சம் நபர்கள் உள்ளனர். இதில் 3.35 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் வரவர போடப்பட்டு வருகிறது. ஏர்போட், ரயில்வே நிலையம், பஸ் கண்டக்டர், டிரைவர், கடைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணி செய்பவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் மக்களிடையே கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இதுபோன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைவரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, வட்டாட்சியர் ஜஸ்டின், பிஎம்சி பள்ளி முதல்வர் கென்னடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.