» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் பணியின் போது விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: கனிமொழி எம்பி வழங்கல்!
செவ்வாய் 22, ஜூன் 2021 12:47:37 PM (IST)
சாத்தான்குளத்தில், தேர்தல் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆசிரியர் சமுத்திரபாண்டி குடும்பத்திற்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ.15 இலட்சத்திற்கான காசோலையினை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தேர்தல் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த கொம்மடிகோட்டை கிராம பள்ளியில் எஸ்.எஸ்.ஏ ஆசிரியர் சமுத்திரபாண்டி என்பவருக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ.15 இலட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று (22.06.2021) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, தேர்தல் ஆணையத்தின் மூலம் அன்னாரது வாரிசுதாரர்களான மனைவி கங்காதேவி மற்றும் மகன்கள் கதிர்காமவேல், கதிர்காமதுரை ஆகியோர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.15 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக, தேர்தல் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த கொம்மடிகோட்டை கிராம பள்ளியில் எஸ்.எஸ்.ஏ ஆசிரியர் சமுத்திரபாண்டி என்பவரின் மனைவி கங்காதேவி அவர்களுக்கு ரூ.2.60 இலட்சத்திற்கான காசோலையினை கனிமொழி எம்பி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் தலைவர் அந்தோணி ஆரோக்கியராஜ், முக்கிய பிரமுகாக்கள் பாலசிங், ராமஜெயம், காசி ஆனந்தம், ஜோசப், பாலமுருகன், பொன்முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.