» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் கடத்திய ரூ.2கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல்: 6 பேர் கைது
திங்கள் 21, ஜூன் 2021 9:02:53 PM (IST)
திருச்செந்தூரில் போலீசாரின் வாகன சோதனையில் திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய ரூ.2 கோடி மதிப்பில் அம்பர்கீரிஸ் என்ற மெழுகு போன்ற பொருளை கைப்பற்றினர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் போலீசார் திருச்செந்தூர் நகரப்பகுதிகளில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திருச்செந்தூர் தாலுகா ஆபீஸ் ரோடு, அழகர் லாட்ஜ் முன்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வந்த ETIOS என்ற நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது மெழுகு போன்ற பொருளை பையில் மறைந்து வைத்திருப்பது தெரியவந்தது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இது திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கீரிஸ் என்பது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இது தொடர்பாக காரில் வந்த 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் தஞ்சாவூர் மாவட்டம் பாளையம்பட்டி வடக்கு தெரு இளங்கோவன் (52), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செங்குளம் வாமபுரம் ராம்குமார் (27), நாகப்பட்டணம் ஆலியூர் வடக்கு தெரு முஹம்மது அஸ்லம் (33), திருச்சி அரியமங்கலம் திருமகள் தெரு ராஜா முஹம்மது (34), தஞ்சாவூர் யாகப்பநகர் 4வது குறுக்கு நர்மதை தெரு வெங்கடேஷ் (48), அதே ஊரைச் சேர்ந்த புதுக்கோட்டை ரோட்டை சேர்ந்த ஜான்பிரிட்டோ (48) என்பது தெரியவந்தது. இவர்கள் விலையுர்ந்த அம்பர் கீரிஸ் மெழுகு போன்ற பொருளை கடத்தி வந்து, இங்கிருந்து இலங்கை வழியாக இந்தோனேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
பிடிப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஆம்பர் கீரிஸ் மற்றும் 6 பேரையும், அவர்கள் வந்த காரையும் திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் ரவீந்திரன் குழுவினரிடம் ஒப்படைந்தனர். தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் செண்பகபிரியா உத்தரவின் பேரில் 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர் கீரிஸ் 1972 வனஉயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 2 கீழ் வகைப்படுத்தப்பட்டது. அம்பர் கீரிஸ் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். பிடிப்பட்ட அம்பர் கீரிசை ஐதரபாத்தில் உள்ள இன்ஸ்டியூட்டிற்கு பரிசோதனைக்கு அனுப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.