» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஃப்ளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு 22½ ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சனி 26, ஜூன் 2021 11:35:43 AM (IST)
அமெரிக்காவில் ஆப்ரோ அமெரிக்க இளைஞர் ஜார்ஜ் பிளாய்டை நடு ரோட்டில் கொலை செய்த போலீஸ் அதிகாரிக்கு 22½ ஆண்டு சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மின்னபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயது கறுப்பின இளைஞர் கடந்த வருடம் மே 25ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவரை கைது செய்த போது போலீசார் இவரை காருக்கு வெளியே தள்ளி கழுத்தை நெரித்தனர். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மிக நீண்ட நேரம் பிளாய்ட் கழுத்தை போலீசார் நெரித்த காரணத்தால் மூச்சு விட முடியாமல் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணம் காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வந்தது. அமெரிக்கா முழுக்க இதனால் மிக தீவிரமாக போராட்டங்கள் நடந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடையவும் இது ஒரு வகையில் காரணமாக இருந்தது. அமெரிக்காவில் நிலவும் நிறவெறி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழக்கும் முன் இறுதியாக அவர் பேசிய "I can't breathe" என்ற வாசகம் உலகம் முழுக்க நிறவெறிக்கு எதிரான வாசகமாக மாறியது. இதையடுத்து ஜார்ஜ் பிளாய்டுக்கு செய்யப்பட்ட உடல் பிரதேச பரிசோதனையில், அவரின் கழுத்தை நெரித்த காரணத்தால்தான், அவர் மூச்சு விட முடியாமல் பலியானார் என்று ரிப்போர்ட் வழங்கப்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தை நெரித்த போலீஸ் அதிகாரி டெரெக் சாவ்வின் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 2ம் டிகிரி, 3ம் டிகிரி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் போலீஸ் டெரெக் சாவ்வின் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி போலீஸ் அதிகாரி டெரெக் சாவ்வினுக்கு 270 மாதங்கள் அல்லது 22.5 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் 15 வருடங்களில் டெரெக் சாவ்வின் கண்டிப்பாக பரோல் பெற முடியாது. 15 வருடங்களும் முழுமையாக சிறையில் இருக்க வேண்டும். அதன்பின் பரோல் விண்ணப்பிக்கலாம். இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை 2ம் டிகிரி கொலைக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தண்டனை ஆகும். அமெரிக்க மக்கள் இடையே, முக்கியமாக ஆப்ரோ அமெரிக்க மக்கள் இடையே இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மின்னசோட்டா நீதிமன்ற நீதிபதி பீட்டர் சாகில் தண்டனையை வழங்கும் போது, நான் இந்த வழக்கை உணர்வு ரீதியாக அணுகவில்லை. சட்ட ரீதியாக மட்டுமே வழக்கை அணுகினேன். ஒரு 2ம் டிகிரி, 3ம் டிகிரி கொலையில் இறந்தவர் அனுபவிக்கும் வேதனையை விட ஜார்ஜ் அதிக வேதனையை அன்று அனுபவித்துள்ளார். அதனால்தான் 22.5 வருட தண்டனை கொடுத்து இருக்கிறேன். நிறவெறியால் ஜார்ஜ் கடும் வலியை அன்று அனுபவித்துள்ளார், என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் டெரெக் சாவ்வின் சிறையில் அடைக்கப்படும் முன் கோர்ட்டில், ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார். அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார். அமெரிக்காவில் கடந்த 16 வருடங்களில் 9 போலீசார் மட்டுமே கொலை வழக்கில் மட்டுமே சிறைக்கு சென்றுள்ளனர். அதில் இவருக்கு மட்டுமே 22 வருட சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
joseJul 9, 2021 - 10:50:36 AM | Posted IP 162.1*****