» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பொதுமக்கள் இனி முகக் கவசம் அணிய வேண்டாம் : பிரான்ஸ் அரசு அறிவிப்பு!
வியாழன் 17, ஜூன் 2021 3:38:32 PM (IST)
பிரான்ஸில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பொதுமக்கள் இனி முகக் கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பொதுவெளியில் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை. மேலும் சில நாட்களில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யூரோ கால்பந்து போட்டிகள் நடந்துவரும் வேளையில் இரவு நேர ஊரடங்கு பிரான்ஸ் கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்து வந்தது. இந்த நிலையில் பிரான்ஸ் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்கா, இஸ்ரேல், கனடா, தென்கொரியா போன்ற நாடுகள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.