» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பிரதமர் மோடி ஆக.23ல் உக்ரைன் பயணம்: போர் முடிவுக்கு வருமா?
சனி 27, ஜூலை 2024 5:09:07 PM (IST)
பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுகிறார்.
சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, போர் தீர்வு அல்ல; சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புடினிடம் கூறியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் ஆரத்தழுவி அன்பினை வெளிப்படுத்தினர். அமைதியை கொண்டு வர தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் இந்தியா தொடர்ந்து செய்யும் என பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உறுதி அளித்திருந்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் துவங்கியதில் இருந்து, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. சமீபத்தில், 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்தித்தார். அப்போது, அவர் போர் தீர்வு அல்ல; சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புடினிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்ல உள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஆகஸ்ட் 23ம் தேதி சந்தித்து பேசுகிறார். போர் பூமிக்கு மோடி பயணம் மேற்கொள்ளுவது, உலக நாடுகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போரை நிறுத்துவதில் மோடியின் பங்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.