» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த துணை விமானி உட்பட 2பேர் பலி
வெள்ளி 17, மார்ச் 2023 5:24:10 PM (IST)
அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த துணை விமானி உட்பட 2பேர் உயிரிழந்தனர்.
அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு கமெங் மாவட்டத்தின் திராங் அருகேயுள்ள மண்டலா பகுதியில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி.ரெட்டி, துணை விமானி ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதில், லெப்டினன்ட் கர்னல் வி.வி.பி.ரெட்டியின் உடல் விமானப் படை விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊரான தெலங்கானாவில் உள்ள ஏடாட்ரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
துணை விமானி ஜெயந்தின் உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜெயமங்கலத்தில் துணை விமானி ஜெயந்தின் உடல் அரசு மரியாதையுடன் நாளைசனிக்கிழமை (மார்ச் 18) காலை 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஜெயமங்கலம், வ.உ.சி.தெருவைச் சேர்ந்த ஆறுமுகம், மல்லிகா தம்பதியின் ஒரே மகனான துணை விமானி ஜெயந்த், கடந்த 2010, செப்டம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்லா என்ற சாரதா செல்வி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
மதுரையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த துணை விமானி ஜெயந்த், படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். தேசிய மாணவர் படையில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். கல்லூரி பருவத்தில் தேசிய மாணவர் படையில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பரிசுகள் பெற்றுள்ளார். ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் துணை விமானி ஜெயந்த் உயிரிழந்த சம்பவம், ஜெயமங்கலம் கிராம மக்கள் மற்றும் தேனி மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.