» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை : காங்கிரஸ் தலைவர்
புதன் 15, மார்ச் 2023 4:20:08 PM (IST)
லண்டனில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 3ஆவது நாளாக முடங்கியுள்ளது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தை முன்வைத்த நிலையில் ராகுல்காந்தி லண்டனில் பேசியதற்கு மன்னிப்பு கேட்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் விவாதங்கள் ஏதுமின்றி 3ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி வெளிநாடுகளில் இந்தியா குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்காத போது ராகுல்காந்தி மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற பேச்சிற்கே இடமில்லை” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அவர், "பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணங்களின்போது இந்தியாவில் பிறந்ததையே முன்னர் பாவமாகக் கருதினர்” என பிரதமர் மோடி பேசியதை சுட்டிக்காட்டினார்.
"ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது. கருத்துரிமை, பேச்சுரிமை ஆகியவை பலவீனமாக உள்ளன. ஊடகங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. உண்மையை பேசுவோர் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தில்லாமல் வேறு என்ன? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக லண்டன் சென்ற காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும்போது அவர்களின் மைக்குகள் அணைக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.