» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் ஜவுளி வளர்ச்சியில் திருப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது : பியூஸ் கோயல்
ஞாயிறு 26, ஜூன் 2022 9:06:49 PM (IST)
திருப்பூரில் அமைந்துள்ள நேதாஜி அப்பேரல் பார்க் இந்தியாவின் ஜவுளி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற "டெக்ஸ் பேர்-2022" கண்காட்சி மற்றும் ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைச்சர் பியூஸ் கோயல் பார்வையிட்டார்.அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதன்பின்னர் திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, திருப்பூரின் வெற்றியை நாடு முழுவதும் பிரதிபலிக்க விரும்புகிறது.நாடு முழுவதும் இதுபோன்ற 75 மையங்களை உருவாக்க விரும்புகிறது.ஜவுளித் துறையில் பெரிய வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த துறையில் அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன, திருப்பூரில் அமைந்துள்ள நேதாஜி அப்பேரல் பார்க் இந்தியாவின் ஜவுளி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூட்டு ஆண்டு வளர்ச்சி அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 8% வளர்ச்சி அடைந்தால், ஒன்பது ஆண்டுகளில் பொருளாதாரம் இரட்டிப்பாகும்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது 3.2 டிரில்லியன் டாலராக உள்ளது, ஒன்பது ஆண்டுகளில் அது 6.5 டிரில்லியன் டாலராக இருக்கும். இன்னும் ஒன்பது வருடங்கள், அதாவது 18 வருடங்கள் கழித்து, நாம் 13 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருப்போம். இன்னும் 27 வருடங்கள் கழித்து, நாம் 26 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருப்போம்… பின்னர் வெளிப்படையாக, இன்றிலிருந்து 30 ஆண்டுகள், இந்தியப் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்று நாம் அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போதைய சவாலான காலத்திலும் இந்தியாவின் பொருளாதாரம் ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வருகிறது.இந்தியா தனது பணவீக்கத்தை நியாயமான அளவில் பராமரிக்க முடிந்தது. தற்போது ஜவுளித் தொழில்துறையின் அளவு ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. மேலும் ரூ.10 லட்சம் கோடி ஏற்றுமதியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடியாக வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.