» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் : கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!
புதன் 18, மே 2022 12:49:22 PM (IST)
சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 250 விசாக்கள் வாங்கித் தருவதாக கார்த்திக் சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக சி.பி.ஐ தெரிவித்தது.
தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் பாஸ்கர ராமனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிபிஐ காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.