» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீட் விவகாரம்: ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
செவ்வாய் 26, அக்டோபர் 2021 4:39:39 PM (IST)
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டியை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவானது 86,600 பேரிடமிருந்து கருத்துகளை பெற்றும், அரசிடமிருந்து புள்ளி விவரங்களைப் பெற்றும் ஓர் அறிக்கையை தயாரித்தது.
இதற்கிடையே, தமிழக அரசு அமைத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அதாவது நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "நீட் ஆய்வுக்குழு செல்லும்” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழு நியமன உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.