» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும் : ராகுல்காந்தி வலியுறுத்தல்!
வெள்ளி 23, ஜூலை 2021 5:45:14 PM (IST)
ரபேல் விமானம் ஊழல் அம்பலமாவதை தடுப்பதற்காக பெகாசஸ் உளவு சாப்ட்வேரை பயன்படுத்தி இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெகாசஸ் உளவு சாப்ட்வேர் மூலம் 300 இந்திய தலைவர்கள், பிரபலங்களின் போன்களையும் ஒட்டுக் கேட்டதாக தகவல் வெளியானது. அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில் ராகுல் காந்தி இன்று செயதியாளர்களை சந்தித்து கூறியதாவது : டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு மத்திய அரசே காரணம். என்னுடைய செல்போனை குறிவைத்து ஒட்டுக் கேட்டு இருக்கிறார்கள்.
நான் ரபேல் விமானம் தொடர்பாக பிரச்சனைகளை எழுப்பிய போது என்னுடைய போன் ஒட்டுக்கேட்கப்பட்டு இருக்கிறது. இது போல அதிகாரிகள், முக்கிய நபர்கள் என பலரது போன்களையும் ஒட்டுக்கேட்டு இருக்கிறார்கள். இந்த தவறு நடந்ததற்கு யார் காரணம்? என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும். இது ஒட்டுமொத்த இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இந்த உளவு சாப்ட்வேரை பயன்படுத்தி போன்களை ஒட்டுக்கேட்க அதிகாரம் கொடுத்தது யார்? இது பற்றி முழு விவரங்களும் வெளியே வர வேண்டும்.
ரபேல் விமானம் ஊழல் அம்பலமாவதை தடுப்பதற்காக இந்த உளவு சாப்ட்வேரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான ஒரு விஷயம். இதுபோல நடப்பதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் மிகப்பெரிய பின்னணிகள் இருக்கின்றன. இப்படி ஒரு தவறு நடந்ததற்கு பிரதமர் தான் நேரடியாக பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.