» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா தடுப்பு மருந்துகளுக்கு அதிக விலை கூடாது: சீனாவுக்கு இந்தியா கோரிக்கை
வெள்ளி 14, மே 2021 4:22:25 PM (IST)
கரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகவிலையை நிர்ணயிக்கக் கூடாது என, சீனாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஹாங்காங்குக்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் தெரிவித்துள்ளதாவது: கரோனா பெருந்தொற்றின் 2ம் அலையின் தாக்கத்தைச் சமாளிக்க இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள், சீனாவில் இருந்துதான் அதிக அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த மருத்துவப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அவற்றுக்கான விலையை அதிகம் உயர்த்தாமல் நிலையாக வைத்திருக்க சீனா நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
இதற்காக சீன அரசின் தரப்பு ஆதரவு தேவை. சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் விலை நிர்ணயக் கொள்கையில் அரசு எந்த அளவுக்குத் தலையிட முடியும் என்பது தெரியவில்லை. எனினும், இந்த விஷயத்தில் சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், சீனா சரக்கு விமான போக்குவரத்தை நிறுத்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சரக்குப் போக்குவரத்தில் விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், கரோனா சிகிச்சைக்கான மருந்துப் பொருள்களை வாங்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் சீனாவை அதிகம் நாடியுள்ளன. எனவே, இந்தியத் தூதரின் இந்த கோரிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.